குழந்தை பெற்ற பெண்ணை பார்க்க அனுமதி மறுத்தப் பெண் மருத்துவர் மீது உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அன்னத்தாய். கருவுற்று இருந்த இவர் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க அவரது உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர் நேரத்தில் மட்டுமே உறவினர்கள் பார்க்க முடியும். ஆனால் அன்னத்தாயை பார்வையாளர் நேரம் முடிந்து மூன்று பெண்கள் பார்க்க வந்தனர். இதனால் பிரசவ வார்டு காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்த மூன்று பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் அர்ச்சனா, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டது. வேண்டுமானால் குழந்தையை மட்டும் வெளியில் எடுத்துவந்து காட்டுவதாகச் சொன்னார். இதனால் கோபம் அடைந்த மூன்று பெண்களும் தாங்கள் குழந்தைக்கு வாங்கி வந்த பவுடர், சோப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர் அர்ச்சனா மீதே தூக்கிஎறிந்து தாக்கிவிட்டு அவரிடம் வாக்குவாதம் செய்து கிளம்பிவிட்டனர்.
இதுகுறித்து சங்கீதா கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் அந்த மூன்று பெண்களும் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.