`எனக்கு திருடக்கூடத் தெரியலையே'; வருத்தப்பட்டு தேம்பித்தேம்பி அழுத திருடன்; சிரிப்பை ஏற்படுத்திய வாக்குமூலம்

விஸ்வநாதன்
விஸ்வநாதன்`எனக்கு திருடக்கூடத் தெரியலையே'; வருத்தப்பட்டு தேம்பித்தேம்பி அழுத திருடன்; சிரிப்பை ஏற்படுத்திய வாக்குமூலம்

ஏடிஎம் மிஷினை உடைத்து திருடி விடலாம் என்று உள்ளே சென்ற ஒருவர்,  அதை  உடைத்து திருட முடியாத நிலையில் எனக்கு திருடக் கூட தெரியலையே என்று அங்கேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தேம்பித் தேம்பி அழுதுள்ளதாக வெளியாகியுள்ளது.

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார்,  ஏடிஎம் மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் கைரேகை போலீஸார்  வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், மோப்ப நாய் கொண்டும் சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏடிஎம் எந்திரத்தை கடப்பாறை வைத்து உடைத்தும், பின்னர் பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். பப்ளிக் ஆபீஸ் சாலை முதல் பெருமாள் கோயில் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாகை பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த 25 வயதான விஸ்வநாதன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து  விஸ்வநாதனை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையின்போது விஸ்வநாதன் தெரிவித்த தகவல்கள் தான் போலீஸாரையும்,  பொது மக்களையும் நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.  "வேலை இல்லாமல் சுற்றித் திரிந்தேன். சரக்கு சாப்பிடணும்போல இருந்தது. பணத்திற்கு என்ன செய்கிறது என்ற யோசிச்சப்போ, 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு, அங்க போய் ஏடிஎம்-ஐ கடப்பாறையால உடைத்தேன். ஆனா, அது சொதப்பிவிட்டது. ஏடிஎம் மிஷினை உடைக்கவே முடியவில்லை. முதன் முதலில் திருட்டுல இறங்கினதுனால என்னவோ, முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சு. நம்மால திருடக் கூட முடியவில்லையே என்று நினைத்து, ஒரு மணிநேரம் ஏடிஎம் அறையிலேயே அழுதுட்டேன்" என்று  விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீஸார், அதை நினைத்து நினைத்து சிரித்தபடியே  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in