ரத்தம் சொட்டும் அரிவாளுடன் ஆசிரியை வீட்டில் புகுந்து கொள்ளை: நெல்லையில் பரபரப்பு

ஆசிரியை வீட்டில் கொள்ளை
ஆசிரியை வீட்டில் கொள்ளைரத்தம் சொட்டும் அரிவாளுடன் ஆசிரியை வீட்டில் புகுந்து கொள்ளை: நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் ஆசிரியை வீட்டில் புகுந்த மர்மக் கும்பல் ரத்தம் சொட்டும் அரிவாளைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மர்ம கும்பல் அவரிடம் இருந்து 11 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மாலையில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அதே வடக்கன்குளத்தில் நடந்துள்ளது.

வடக்கன்குளத்தைச் சேர்ந்த டேனியல் சேகர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா(55) வடக்கன் குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது மகள் ஹெல்சியாவும் இவரும் இதனால் வடக்கன்குளத்தில் உள்ள அவர்களின் வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலையில் வீட்டில் சசிகலாவும், ஹெல்சியாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக்கொண்டு மர்மக் கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் கையில் ரத்தம் சொட்ட, சொட்ட அரிவாள் ஒன்று இருந்தது.

அதைக்காட்டி சசிகலா, ஹெல்சியாவை அவர்கள் மிரட்டினர். தொடர்ந்து பீரோவில் இருந்த 32 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக பணக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கீழே விழுந்திருந்த ரத்தத்தை எடுத்துச் சோதனை செய்ததில் அது கோழியின் ரத்தம் என்பதும், அச்சுறுத்தும் நோக்கத்தில் அவர்கள் அரிவாளில் தடவி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in