கரை ஒதுங்கியது மருத்துவக் கல்லூரி மாணவர் உடல்: போலீஸார் தீவிர விசாரணை

சிவக்குமார்
சிவக்குமார்

காரைக்கால் கடலில் குளித்தபோது கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரின்  உடல் வாஞ்சூர்  அருகே கரை ஒதுங்கியது.

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு ரேடியாலஜி  பட்ட படிப்பு படித்து வரும்  அகிலாண்டேஸ்வரி,  கனகலட்சுமி, கிரேனா,  சிவக்குமார் உள்ளிட்ட  15 மாணவர்கள் நேற்று  காரைக்காலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் காரைக்கால் கடலில் குளித்து விளையாடி உள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி நான்கு மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.  கரையில் இருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களால் மூன்று மாணவிகள் உடனடியாக  மீட்கப்பட்டனர்.  அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவனை மட்டும் மீட்க முடியவில்லை.

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட  மாணவர் சிவகுமார் மாயமானார்.  மாயமான மாணவரை தேடும் பணியில். பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன்  காரைக்கால் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டிருந்தனர்.  இந்த நிலையில் இன்று  வாஞ்சூர் கடற்கரை பகுதியில் ஆண் சடலம் ஒன்று  கரை ஒதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காரைக்கால் போலீஸார் சடலத்தை கைப்பற்றி  விசாரணை செய்ததில் அது  மாணவர் சிவக்குமார் உடல் என தெரியவந்தது. 

உயிரிழந்த மாணவன் சிவக்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கடலோர பாதுகாப்பு குழும  போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in