திருநெல்வேலியில் தொழிலதிபரைக் கடத்தி பத்து லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் தொடர்ந்து பேரம் பேசிவந்தது. இந்நிலையில் இன்று தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அபிஷேக்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்த்ராஜ்(63). பில்டிங் கான்டிராக்டராக உள்ளார். இவர் திருநெல்வேலி டவுண் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் தன் பேத்தியை அழைத்துவரக் காரில் சென்றார். ஆனால் அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செக்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து டவுண் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக ஜேக்கப் ஆனந்தராஜின் குடும்பத்திற்கு தொடர்ந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதில் இந்திக்காரர்கள் பேசினர். அவர்கள் ஜேக்கப் ஆனந்த்ராஜ் தங்கள் பிடியில் இருப்பதாகவும் பத்து லட்சம் ரூபாய் தந்தால் உடனே அவரை விடுவிப்பதாகவும் பேசியுள்ளனர். இந்நிலையில் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் குளக்கரையில் இன்று காலையில் ஜேக்கப் ஆனந்த்ராஜ் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இருகால்களும், ஒரு கையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. அவரை வட இந்தியக் கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தி நோக்கம் நிறைவேறாததால் கொலை செய்ததா? அல்லது வேறு யாருடனும் அந்த அவருக்கு முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்தும் பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.