சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்... தப்பியோட முயன்ற போது துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்!

துப்பாக்கியால் சுடப்பட்ட சதாம் உசேன்.
துப்பாக்கியால் சுடப்பட்ட சதாம் உசேன்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர், போலீஸாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் ஹூப்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள நவ்நகரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது பெற்றோர், சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது நவ்நகரைச் சேர்ந்த சதான் உசேன் என்ற வாலிபர், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறினார்.

இதையடுத்து அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விஷயத்தை அறிந்த இந்து அமைப்பினர் நேற்று மாலை, நவ்நகர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சதாம் உசேன் தலைமறைவானார். அவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அப்போது தன்னை வழிபாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று போலீஸாரிடம் சதாம் உசேன் கூறினார். இதனால் அவரை போலீஸார், வழிபாட்டுத்தலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது திடீரென போலீஸாரை தாக்கி விட்டு சதாம் உசேன் தப்பியோட முயன்றார். அப்போது தார்வாட் வித்யாகிரி காவல் நிலைய அதிகாரி சங்கமேஷ் திதிகனாலா, சதாம் உசேனை துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து சதாம் உசேனை ஹூப்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in