இளம்பெண்ணுடன் காதல்; தாயை சிறை வைத்த போலீஸ்: மனஉளைச்சலால் உயிரை விட்ட வாலிபர்

இளம்பெண்ணுடன் காதல்; தாயை சிறை வைத்த போலீஸ்: மனஉளைச்சலால் உயிரை விட்ட வாலிபர்

காதல் விவகாரத்தில் தனது தாயை காவல்நிலையத்தில் வைத்திருந்ததால் மனஉளைச்சலில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மெய்யனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). கூலித்தொழிலாளியான இவரும், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக பெண் வீட்டார், மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனால் இரு வீட்டாரையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால் இருவீட்டாரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மணிகண்டன்.
மணிகண்டன்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு மணிகண்டன் தொல்லை கொடுத்ததாக பெண்ணின் பெற்றோர் பள்ளப்பட்டி காவல்நிலையம் மற்றும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

கூலி வேலைக்காக மணிகண்டன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது தாய் பழனியம்மாளை, போலீஸார் விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு நாள் முழுவதும் பழனியம்மாளை போலீஸார் காவல்நிலையத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அத்துடன் தன்னையும் விசாரணைக்கு போலீஸார் அழைப்பார்கள் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து மணிகண்டன் தனது வீட்டில் நேற்று நள்ளிரவு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் தற்கொலைக்கு பெண் வீட்டாரின் பொய் மற்றும் காவல்துறை அளித்த மனஉளைச்சலே காரணம் என்று மணிகண்டனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in