
தருமபுரி மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் ஏழு பேரை அம்மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியில் தொடர்ந்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பல வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொம்மிடி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது , அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டவர் என்பதும், சேலம் ஏற்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஏற்காடு விரைந்த தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய பெரியான் , கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து தருமபுரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தனிப்படையினருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.