கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மக்களைத் தூண்டும் வகையில் வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் சங்கரன்கோவிலில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ளது சின்னகோவிலாங்குளம். இங்கு குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் (27). இவர் தனது வாட்ஸ் -அப்பில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். கூடவே, அந்த ஸ்டேட்டஸை தன் நண்பர்களுக்கும், தான் இருக்கும் குழுவினருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்த அந்தப் பதிவு சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவலைப் பரப்பியதாக ரமேஷ்கண்ணன் மீது விசாரணையைத் தொடங்கினர் சின்னகோவிலாங்குளம் போலீஸார். இதையடுத்து ரமேஷ்கண்ணனை கைது செய்த போலீஸார், தகவல் தொடர்புசாதனத்தை தவறாகப் பயன்படுத்தியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.