
தூத்துக்குடி மீனவர் மருத்துவமனைக்குச் சென்றுவந்த இடைவெளியில் அவர்வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் அந்த வீட்டில் வெள்ளையடிக்க வந்த பெயின்டர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன்(28). மீன் பிடித் தொழில் செய்யும் இவரும், இவரது மனைவியும் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். இவர்கள் இரண்டு மணிநேரத்தில் வீடும் திரும்பிவிட்டனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டியன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. ஜெயபாண்டியன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய இரண்டு மணிநேர இடைவெளியைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸாருக்கு ஜெயபாண்டியன் புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வந்து அங்கிருந்த தடயங்களைச் சேகரித்துச் சென்றனர். வீடுகள் நெருக்கடி மிகுந்த சாலையில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் கைப்பற்றி ஆய்வுசெய்தனர். அதில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது, திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன்(32) எனத் தெரியவந்தது.
பிரபாகரன், ஜெயபாண்டியன் வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெள்ளையடிக்க வந்துள்ளார். அப்போது, நோட்டமிட்ட பிரபாகரன், ஜெயபாண்டியன் வெளியில் சென்ற நேரம் பார்த்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 35 1/2 பவுன் நகையையும் மீட்டனர்.