70 மாத்திரைகளைச் சாப்பிட்டும் சாகாத தாய்; கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்: டெல்லியில் பயங்கரம்

தாயைக் கொலை செய்து தற்கொலை செய்ய மகன் முயற்சி
தாயைக் கொலை செய்து தற்கொலை செய்ய மகன் முயற்சி70 மாத்திரைகளைச் சாப்பிட்டும் சாகாத தாய்; கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்: டெல்லியில் பயங்கரம்

70 உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டும் சாகாத தனது தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி துவாரகா ஹிமாலயா அபார்ட்மென்டைச் சேர்ந்தவர் பாசாபி பிஸ்வாஸ்(65). இவரது மகன் அனிர்பன் பிஸ்வாஸ். தனது கணவர் இறந்த நிலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் பாசாபி பிஸ்வாஸ் தவித்து வந்தார். இதன் காரணமாக தாயும், மகனும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதன்படி மார்ச் 13-ம் தேதி 70 உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை பாசாபி பிஸ்வாஸ் சாப்பிட்டுள்ளார். ஆனால், அவர் அடுத்த நாள் வரை இறக்கவில்லை.

இந்த நிலையில், கழுத்தில் அணியும் டை கொண்டு அவரது கழுத்தை மகன் அனிர்பன் பிஸ்வாஸ் நெரித்துள்ளார். இதனால் பாசாபி பிஸ்வாஸ் துடி துடித்து இறந்து போனார். இதன் பின் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய அனிர்பன் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பாசாபி பிஸ்வாஸ் இறந்த தகவல் போலீஸாருக்கு நேற்று கிடைத்தது. இதையடுத்து அவர்கள் துவராகாவில் உள்ள பாசாபி பிஸ்வாஸ் வீட்டிற்கு வந்த போது அவர் கட்டிலில் கழுத்தில் காயத்துடன் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவர் அருகே 7 வெறும் மாத்திரை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அத்துடன் சுவரில் தற்கொலை குறிப்பு இருந்தது. இதைப் பார்த்தவுடன் அவர் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிந்தது.

ஆனால், அவர் கழுத்தில் இருந்த காயத்தால் சந்தேகமடைந்து அவரது மகன் அனிர்பன் பிஸ்வாஸைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் தான், தன் தாய் பாசாபியை கழுத்தை நெரித்து அனிர்பன் கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அனிர்பன் கொடுக்க வாக்குமூலத்தில், " பொருளாதார நெருக்கடியால் தவித்ததால் தாயும், நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். அதற்காக 70 மாத்திரைகளை உட்கொண்டும் எனது தாய் சாகவில்லை. ஆனால், அவர் வலியால் துடிப்பதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். அடுத்து நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றேன். ஆனால், அந்த முயற்சியில் தோற்றுப்போனேன்" என்று கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in