கர்ப்பிணிப் பெண்ணைத் துன்புறுத்திய மருத்துவத்துறை: கண்டித்து சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வீட்டிலேயே குழந்தை பெற்ற பெண்ணைத் துன்புறுத்திய மருத்துவத்துறை மற்றும் அவர்களுக்கு உடந்தையாக பொய் வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆகியோரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருக்கூரைச் சேர்ந்த ஜான்- பெல்சியா தம்பதி. தங்களது இரண்டாவது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம் பெற்றுக்கொண்டனர். இதற்கு  மருத்துவத்துறையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசவம் முடிந்து நல்ல நிலையில் இருந்த பெல்சியா மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தினர்.  அவர்கள் வர மறுத்ததால்  அன்று இரவு காவல்துறையினருடன் வந்து பெல்சியாவையும், குழந்தையையும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

அதற்கு உடன்படாத அவரது கணவர் ஜான் மற்றும் உறவினர்களைக் கைது செய்து விடுவதாக மிரட்டினர். மேலும் பெல்சியாவை  கழிவறைக்குச் செல்ல விடாமலும்,  குழந்தைக்குப் பால் கொடுக்க விடாமலும்  அவர்கள் தடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக இயற்கை விவசாயி சுதாகர் என்பவர் மீது சுகாதாரத்துறையினர் கொடுத்த புகாரை ஏற்று கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனைக் கண்டித்து மனித உரிமை ஆணையத்தில் ஜான் பெல்சியா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விஷயத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கையில் எடுத்து மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த வாரத்தில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சீர்காழியில் காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையினரைக் கண்டித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in