
இடத் தகராறில் சொந்த பெரியம்மாவை அவரது தங்கை மகன் மண்வெட்டியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே மோவூர் கிராமம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மல்லிகா (55). இவரது தங்கை மகன் தீபராஜ். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மல்லிகாவிற்கு சொந்தமான இடத்தில் வந்து இடம் சம்பந்தமாக தீபராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவருக்கும் மல்லிகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீபராஜ் திடீரென கையில் வைத்திருந்த மண்வெட்டியால் மல்லிகாவின் தலையில் வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தியாதோப்பு சரக டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீபராஜை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.