கோயிலுக்கு வந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்து பிடிபட்ட நபர் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றங்கரையில் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த நவ.26-ம் தேதியன்று வழிபடுவதற்காக ரெட்டிபாளையம் சாலையைச் சேர்ந்த உமா என்பவர் வந்தார். அப்போது அங்கிருந்த பக்தர் போல தோற்றமளித்த ஒருவர் உமாவின் ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். இதனால் உமா சத்தம் போடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து திருடனைப் பிடித்து கட்டி வைத்து தாக்கினர்.
தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸாரை வரவழைத்து அவர்களிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் திருவையாறைச் சேர்ந்த ரமேஷ் (57) என்பது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், ரமேஷ் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தஞ்சாவூர் முழுவதும் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.