`ஏற்கெனவே உத்தரவு இருக்கிறது; மீண்டும் வழக்கு தொடர்ந்தது ஏன்?'- மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி

`ஏற்கெனவே உத்தரவு இருக்கிறது; மீண்டும் வழக்கு தொடர்ந்தது ஏன்?'- மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், `இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரசு அலுவலகங்களில் அவரது படத்தை பொருத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதித்துள்ளது. ஆனால் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவு உள்ளதால் மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக எச்சரித்தது. இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in