டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை

டாஸ்மாக் நிறுவனம்  7 ஆயிரத்து 986 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2021-22-ம் நிதியாண்டிற்கு  7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்துக்கு  வருமான வரித்துறை அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை  எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து இதேபோன்ற வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், 2021-22-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், இரு நீதிபதிகள் அமர்வை அணுகுமாறும் அவர்  உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த  உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை தரப்பில் 2016-17 ம் ஆண்டில் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரியாக செலுத்திய 14,000 கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும்,  மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி  வருமான வரி செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதிப்பு கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதிகள்,  வருமானவரித்துறை நோட்டீசுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை விதித்தும், வழக்கு குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in