எல்லா விசாரணைகளையும் மனித உரிமை மீறலாக கருத முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் எல்லா விசாரணைகளையும் மனித உரிமை மீறலாக கருத முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
Updated on
1 min read

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும், சாதாரணமான ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர்  சுமித்தி சலானி என்பவருடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார். வெள்ளி விளக்குகள் சப்ளை செய்த வகையில் தனக்கு தர வேண்டிய பாக்கியை தராததால், சலானிக்கு எதிராக ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுசம்பந்தமாக தன்னை விசாரணைக்கு அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், தனது மெர்சிடஸ் பென்ஸ் காரின் ஆவணங்களை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதாக உதவி ஆணையர் லட்சுமணனுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரமேஷ் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், உதவி ஆணையருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்ததில் ரமேஷ், எந்தவித மனித உரிமை மீறலுக்கும் ஆளாக்கப்படவில்லை என்று கூறி, மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், சாதாரணமான ஒவ்வொரு போலீஸ் விசாரணையையும் மனித உரிமை மீறலாக கருத முடியாது.  குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளின் வேறுபாடுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதால், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  இதுபோன்ற வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள்  வலியுறுத்தியுள்ளனர்.

ஆரம்ப நிலையிலேயே காவல்துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது, ஒட்டுமொத்த போலீஸ் படையினரையும் ஊக்கக் குறைவுபடுத்த காரணமாகிவிடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in