மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி ஒருவரின் மரணத்தையடுத்து, கடந்த ஜூலை 17-ம் தேதி பெரும் வன்முறை நிகழ்ந்தது. அப்போது, முழுமையாக சூறையாடப்பட்ட பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டது, இந்த கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
பள்ளியை திறக்கக்கோரி அதன் தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளியை திறக்க அனுமதியளித்தது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளி தரப்பில், 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்பு, எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும், பிற வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, இதுபோன்ற சம்பவம் இனி எந்த மாணவருக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனவும், உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா எனவும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், பள்ளி திறப்பட்ட பின்பு உள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய அவசாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று ஜனவரி 10-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.