உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கோடை வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு டிகிரியாவது வெப்பநிலை உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் வரை வெப்பநிலை உயர்ந்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, "நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகளில் சராசரி அளவை விட வெப்பம் அதிகரிக்கும்.

சமவெளிப் பகுதிகளில் அதிக அனல்காற்று வீசும். இதன் காரணமாக குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,  "தேர்தல் நேரத்தில், வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. எனவே, இதை சமாளிக்க, முன் கூட்டியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்றார். இப்படி வானிலை ஆய்வு மையமும் மத்திய அமைச்சரகமும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும். வயதானவர்களையும், குழந்தைகளையும் தனியே வெளியில் அனுப்பாதீர்கள். தேவையான அளவு குடிநீரைப் பருகுங்கள். வெயில் காலங்களில் பருத்தியினால் ஆன ஆடைகளை அணியுங்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in