
செங்கல்பட்டில் தங்கையின் திருமணத்திற்கு செல்லக் கூடாது என கணவன் தடைவிதித்தக் கோபத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட மெய்யூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா என்கிற நந்தினி வயது 26. இவர்களுக்கு காதல் திருமணமாகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திவ்யாவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், அத்திருமணத்திற்கு செல்லக்கூடாது என ராஜ்குமார் தொடர்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்த நிலையில், நேற்று இருவருக்குள் வாக்குவாதம் முற்றி ராஜ்குமார் திவ்யாவை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து படாளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த திவ்யாவின் வயது 26 என்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.