ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெறுக - காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆர்டர்லிகளை  உடனடியாக  திரும்பப் பெறுக - காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2014-ம் ஆண்டு, காவலர் குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக காவலர் மாணிக்கவேல் என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், ஆர்டர்லி முறையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையைப் பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற காவல் துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுச்சேர்ந்து செயல்படுவது அழிவுக்கு இட்டுச் செல்லும். காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறு என ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். அதெல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். மற்றவர்களின் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கரை எல்லாம் அகற்றிவிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தி அளிக்கிறது என்று கூறிய நீதிபதி, அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in