பகலில் வெப்ப அலை வீசக்கூடும்; இவர்கள் பகலில் வெளியே வரக்கூடாது: எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் வெப்ப அலை
தமிழகத்தில் வெப்ப அலைபகலில் வெப்ப அலை வீசக்கூடும்; இவர்கள் பகலில் வெளியே வரக்கூடாது: எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் குழந்தைகள், வயதானோர், கப்பிணிகள் முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய நோய்த்தடுப்பு மையம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல் படி  வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.

அதில், ‘’பருவகால மாறுபாடு குறித்த கூட்டத்தை  மாவட்ட பணிக்குழுக்களுடன் இணைந்து நடத்தி, மாவட்ட அளவில் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.அவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். 

அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம்,  இறப்பு  ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதனால் பாதிக்கப்படுவர்கள் குறித்த பட்டியல்  ஒவ்வொரு மருத்துவமனையிலும்  பராமரிக்கப்பட வேண்டும்.

அனைத்து மருத்துவ அலுவலர்களும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை கண்டறிவதில் திறன் பெற்றிருக்க வேண்டும். அதீத வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ORS பாக்கெட்டுகள்,  ஐ.வி திரவங்கள், ஐஸ் பேக்குகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக குடிநீர்,  குளிரூட்டும் கருவிகள் , ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அதீத வெப்பத்தால் பக்கவாதம் ஏற்படுபவருக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக தரப்பட வேண்டும். மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்’’ என மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தவிர பொதுமக்கள் அதிக நீர் அருந்துதல்,  வெயிலில் செல்லாமல் தற்காத்துக் கொள்ளுதல் அவசியம் எனவும், ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறும், ,குழந்தைகள், வயதானோர்,  கப்பிணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி,  மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in