அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ஒருவருடம் படித்து முடிந்ததும் பள்ளியிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி சேகரிக்கப்பட்ட புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போட்ட தலைமையாசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஈஸ்வரி என்பவர் தலைமையாசிரியராக உள்ளார். தமிழக அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவே பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் படிப்பு முடிந்ததும் அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போது இந்த புத்தகங்களை பள்ளியில் வழங்கிவிட வேண்டும். பள்ளிக்கூடம் இந்த புத்தகங்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும். இப்படி காமராஜபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களின் புத்தகம் சேகரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தலைமையாசிரியை ஈஸ்வரி கல்வித்துறையின் ஒப்புதலோ, அனுமதியோ இன்றி சேகரித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான பழைய பாட புத்தகங்களை பழைய பேப்பர் விலைக்கு வாங்கும் வியாபாரிகளிடம் விலைக்குப் போட்டுள்ளார். அதில் மொத்தம் 250 கிலோ பாடப் புத்தகங்கள் இருந்துள்ளது. இதனிடையே அந்த பாடப்புத்தகங்கள் உள்ளூர் டீக்கடைகளில் வடை மடக்கிக் கொடுக்கும் அளவுக்கு சென்றது. இதன் மூலம் இவ்விவகாரம் குறித்துத் தெரியவந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கலாவதி, தலைமையாசிரியை ஈஸ்வரியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பழைய பேப்பர் கடையில் பாடப்புத்தகங்களை விலைக்குப் போட்டு தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.