
நத்தத்தில் வீடு முன் இரவில் நிறுத்திய இரு சக்கர வாகனத்தை மர்மநபர்கள் துாக்கிச் சென்றது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வத்திபட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தனது நண்பர் பழனிக்குமார் வீட்டில் தினமும் நிறுத்தி செல்வது வழக்கம். இதே போல், தனது வாகனத்தை பழனிக்குமார் வீடு முன் நேற்றிரவு நிறுத்தியிருந்தார். இன்று காலை வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்தார்.
அதில், அந்த வாகனத்தை தலைக்கவசம் அணிந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் லாவகமாக துாக்கிச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து நத்தம் போலீஸில் அழகுராஜா புகாரளித்தார். இதன்படி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற செயல்கள் குறைய வேண்டும் என கருப்பணசுவாமிக்கு கிடா வெட்டி வேடச்சந்துார் போலீஸார் வேண்டுதல் நிறைவேற்றியிருந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.