
செங்கல்பட்டில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட்டு சாலை அருகே திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பேருந்தும் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற டிப்பர்லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர் உட்பட 25 பேர் காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
அரசு பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி கட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.