சித்திரைப் பெருவிழா
சித்திரைப் பெருவிழாமதுரை குளுங்க குளுங்க; கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது!

‘மதுர குலுங்க குலுங்க’ கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது!

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலாகலம் பூண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரைத் திருவிழா என்பது மதுரை மட்டுமல்லாது உலகளவில் பக்தர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா, 12 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது. இன்று காலை மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில், தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டுகள் சுற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீபாரதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரிவார மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து 4 மாசி வீதிகளிலும், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும் நடக்க இருக்கிறது.

ஏப்ரல் 30 அன்று மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே.1 அன்று திக் விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 2 அன்று  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அதனை தொடந்து மே 4 அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவை, மே 5 அன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.45 முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவிற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in