`என் மீதான குற்றச்சாட்டை தாராளமாக சிபிஐ விசாரிக்கலாம்'- பொன் மாணிக்கவேல் அதிரடி

`என் மீதான குற்றச்சாட்டை தாராளமாக சிபிஐ விசாரிக்கலாம்'- பொன் மாணிக்கவேல் அதிரடி

"சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷா மீது போடப்பட்ட வழக்கில் தன் பெயரும் இடம் பெற்று இருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது" என்றும் தன்மீதான குற்றச்சாட்டு குறித்து தாராளமாக சிபிஐ விசாரிக்கலாம், தான் பொறுப்பேற்ற காலத்தில் அதிக சிலைகள் மீட்கப்பட்டதாகவும் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.

சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையதாக 2017 மற்றும் 2019 என வெவ்வேறு வழக்குகளில் டிஎஸ்பி காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டார். அப்போது அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்கு போட்டதாக காதர் பாட்ஷா நீதிமன்றத்தை நாடினார். காதர் பாட்சா கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், நேரில் பார்த்த சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலங்கள், அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி சமீபத்தில் சிபிஐ போலீஸார் டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிஎஸ்பி காதர் பாஷா வழக்கில் சிபிஐ, தன் மீதும் வழக்குப்பதிவு செய்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தான் அதிகாரியாக இருந்தபோது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி அசோக் நடராஜன் பதிவு செய்த அதே முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ மீண்டும் காதர் பாட்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரையும், தீனதயாளனையும் தப்பவைப்பதற்காக தன்னை சிக்க வைக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் காதர் பாட்ஷா. அவர் கூறியது அடிப்படை ஆதாரம் இல்லாததாது. 1988 முதல் தீனதாயளன் சிலை கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். தான் அதிகாரியாக வந்த பிறகு தான் அவரை கைது செய்தேன். இத்தனை வருடமாக எத்தனையோ அதிகாரிகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தான் அதிகாரியாக வந்த பிறகு தான் முதன் முதலில் தீனதயாளன் மீது நடவடிக்கை எடுத்தேன். ஆனால், தீனதயாளனை தான் தப்ப வைத்ததாக கூறுவது அபத்தம்.

டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கில் தான் விசாரணை அதிகாரியோ, கண்காணிப்பு அதிகாரியோ இல்லை. விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அசோக் நடராஜன்தான். தனக்கு மேல் அதிகாரியாக டிஜிபி பிரதீப் பி பிலிப் இருந்தார். இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பிரதீப் வி பிலிப்பையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். துப்பாக்கி முனையில் சிலை கடத்திய டிஎஸ்பி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது அப்போதைய டிஜிபிக்கு பிடிக்கவில்லை. (அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன்). எப்படி எப்.ஐ.ஆர் போட்டீங்க என்று கேட்டவரிடம் பேனாவால் தான் போட்டேன் என தெரிவித்தேன். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யாரால் நடந்தது?.

ஜெர்மனியில் இருந்து சுபாஷ் கபூரை கொண்டு வந்து நான்கு வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது தான் அதிகாரியாக இருந்த காலத்தில் தான். இந்த வழக்கில் சாட்சிகளை விசாரித்து ஆதாரங்களை திரட்டி சிறப்பாக பணிபுரிந்த டிஎஸ்பி அசோக நடராஜனுக்கு உரிய கவுரவம் வழங்கப்படவில்லை. ஒரு மரியாதைக்கு கூட சுபாஷ் கபூருக்கு தண்டனை பற்றிய தகவல் தனக்கு தெரிவிக்கப்படவில்லை. சுபாஷ் கபூர் வழக்கில் தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை அழைத்து டிஜிபி வெகுமதி அளிக்கிறார். தன் கடமையை செய்ய வேண்டியது காவல் துறையின் பணி. சட்டத்தில் இது போன்ற பணிகளுக்கு வெகுமதி அளிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. வீரப்பனை சுட்டு பிடித்த 700 காவல் துறையினருக்கு விருது கொடுத்தார்கள். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த டிஎஸ்பி அசோக் நடராஜனுக்கு சிறு அங்கீகாரம் கூட இல்லை. முறையாக பார்த்தால் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

தனக்கு விருதுகளோ, அங்கீகாரமோ, கேட்கவில்லை. ஆனால் அதில் நீண்ட காலம் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அதே வேளையில், தீனதயாளன் வழக்கில் தற்போது உள்ள அதிகாரிகள் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தீனதயாளன் வழக்கு உள்பட நான் விட்டு வந்த வழக்குகளில் இரண்டே முக்கால் ஆண்டுகளாகியும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

தான் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் பிரைவேட் போலீஸாக தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகிறேன். ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள சிவனடியார்கள் மூலம் கண்காணித்து அவர்களையும் ஒரு பிரைவேட் போலீஸாக மாற்றி சிலைகளை காப்பதற்கான பணியில் இறங்கியுள்ளனர். தமிழக கோயில்களில் உள்ள 3.5 லட்சம் சாமி விக்ரகங்கள் அறநிலைய துறையால் பதிவு செய்யாமல் இருக்கிறது. சுமார் 2,500 சிலைகள் வடக்கில் இருந்து மீட்கப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை அந்தந்த கோயில்களில் திருப்பி வைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in