முதுமலையில் விடப்பட்டது ஆட்கொல்லி ஊட்டி சிறுத்தை!

கூண்டில் பிடிபட்ட சிறுத்தை
கூண்டில் பிடிபட்ட சிறுத்தை

கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் முதுமலை வனத்தில் பாதுகாப்பாக அதனை விடுவித்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10-ம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் நான்கு வயது மகள் சரிதாவை அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் கிராம பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து வனத்துறையினர் சார்பில் தேயிலை தோட்டங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, அந்த பகுதிகளில் இரண்டு கூண்டுகளை வைத்தனர். அதில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்து அதன்மூலம் சிறுத்தையை பிடித்தனர்.

உதகை வடக்கு வன கோட்ட வனச்சரகர் ரமேஷ் தலைமையில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை லாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் சிறுத்தையை பாதுகாப்பாக விடுவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அரக்காடில் பிடிப்பட்ட பெண் சிறுத்தைக்கு சுமார் 4-5 வயதிருக்கும். நேற்று இரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆரோக்கியமாக உள்ளது. இன்று அதிகாலை முதுமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in