பணத்துக்கு பதில் சில்லறையை அள்ளிக்கொடுத்தார்: கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்!

கொள்ளையன் ராஜகுமார்
கொள்ளையன் ராஜகுமார்

மளிகைக் கடையை உடைத்து கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையனை ஓட்டுநர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் நேற்றிரவு அரும்பாக்கம் ஸ்கைவாக் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றதும், ஆட்டோ ஓட்டுநர் விஜய் அந்த நபரிடம் பணம் கேட்டபோது அந்த நபர் பையில் இருந்து சில்லறையாக எடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த நபரின் பையை சோதித்ததில் சிகரெட், பாக்கு, பணம் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் அவரை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகுமார்(25) என்பதும், இவர் அமைந்தகர- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மளிகைக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட், பணம், பாக்கு ஆகியவற்றை திருடி கொண்டு சொந்த ஊருக்கு தப்பி செல்ல முயன்றபோது சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ராஜகுமார் அமைந்தகரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, போலீஸார் ராஜகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு வேறு ஏதேனும் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in