
தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகளுக்கு அதிரடியாக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அவர்களில் பலர் விளக்கம் அளிக்காததாலும், பலர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் படி தஞ்சை வடக்கு வீதியில் உள்ள 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவுளி பிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் இன்று காலையில் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து தஞ்சை மாநகரில் உள்ள மேலும் 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று மொத்தம் 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
அதிகாரிகள் அதிரடியாக கடைகளுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் தஞ்சை மாவட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.