கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்
கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்

தீண்டாமை கொடுமையில் சிக்கிய பாஞ்சாங்குளம்: கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக பணியிட மாற்றம்

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக வழக்கு, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரையும் மாற்றி அரசு அதிரடி காட்டியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. அங்கு குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

அந்தக் கடைக்காரர் குழந்தைகளிடம், “இனிமேல் நீங்கள் யாரும் இங்குவந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளூர் கடையில் வாங்கக்கூடாது. நீங்கள் போங்க ”எனக் குழந்தைகளிடம் சொல்கிறார். கூடவே, “ இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” எனச் சொல்கிறார் கடைக்காரர்.

உடனே, கட்டுப்பாடா? என அந்தக் குழந்தைகள் ஆச்சரியத்தோடு, என்னக் கட்டுப்பாடு என்கிறார்கள். உடனே, ‘கட்டுப்பாடுன்னா.. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்கு. உங்கத் தெருவுல உள்ளவங்களுக்கு பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” எனக் கூலாகச் சொல்லி குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார். இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏக்கத்துடன் செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து தீண்டாமையை அந்த கிராமத்தில் அமல்படுத்திய பாப்பாங்குளம் நாட்டாமை மகேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு சொந்தமான கடைக்கும் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி சீல் வைத்தார். இதேபோல் பாஞ்சாங்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(20) என்னும் வாலிபரும் கைது செய்யப்பட்டார். இருவரும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். மேலும் முருகன், குமார், சுதா ஆகிய மூவர் மீதும் இவ்விவகாரத்தில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் பாஞ்சாங்குளம் கிராம நிர்வாக அலுவலரை மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த கிராமத்தில் மல்லிகா என்பவர் வி.ஏ.ஓவாக இருந்தார். இவர் கூடுதல் பொறுப்பாக பாஞ்சாங்குளத்தைப் பார்த்துவந்தார். இவருக்குப் பதிலாக மாரியப்பன் என்பவரை புதிய கிராம நிர்வாக அலுவலராக நியமித்துள்ளது அரசு. இதற்கான ஆணையை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in