அடிக்கடி பணம் கேட்டு தரமறுத்த பெண்ணின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர் மற்றும் அந்த புகைப்படத்தைக் காட்டி பணம், நகை கேட்டு மிரட்டிய வாலிபரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறைஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (35). இவருக்கும், கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரையும் நெருக்கமாக்கியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதன் பின்னர், பணம் கொடுக்கவில்லை என்றால், தன்னுடன் தனிமையில் இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண், பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, அந்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தைக் காட்டி சிரஞ்சீவியின் தந்தை முனியன், அவரது தாய் அங்கம்மாள், மனைவி ரஞ்சிதகுமாரி மற்றும் இறைஞ்சி கிராமத்தை சேர்ந்த காசியம்மாள், மணிகண்டன் ஆகியோர் அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிரஞ்சீவி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.