இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் பாடத்திட்டத்திலேயே இல்லாத ஆபாசப்பாடம் எடுத்த கணக்குப்பதிவியில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்குப் பதிவியல் ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்துதாஸ். இவர் கணக்க்குப்பதிவியல் பாடம் எடுக்கும்போது பள்ளியில் மாணவிகள் முன்பு ஆபாசமாக பேசுவதாக சில மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் எஸ்.பி அலுவலகத்திலும், மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தனர்.
அந்தப்புகாரில் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் கிறிஸ்துதாஸ் தினமும் செக்ஸ் பாடம் நடத்துவதாகவும், அதை யாரும் மாணவிகள் எதிர்த்துக் கேட்டால், உடனே தலைமையாசிரியரிடம் சொல்லி டிசி வாங்கிக்கொடுத்து விடுவதாகவும் மிரட்டுகிறார். இதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவே அச்சத்தில் உள்ளனர் ”என்றும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், இதுதொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணைக்குப்பின் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.