நெல்லை மாவட்டம், பணக்குடியில் ஆசிரியர் பயிற்சி மைய மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணக்குடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் தென்கரை முத்து. இவருக்கு ஆறுமுகம் என்ற மகனும், நீலாம்பரி(21) என்ற மகளும் உண்டு. நீலாம்பரி வள்ளியூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டு சமையலறைக்குச் சென்ற நீலாம்பரி அங்கிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தென்கரை முத்து தன் மனைவி, மகள் நீலாம்பரி, மகன் ஆறுமுகம் என குடும்ப சகிதம் நேற்று மதியம் முப்பந்தலில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பினார். அப்போது மகிழ்ச்சியாகவே கோயிலுக்கு வந்த நீலாம்பரி திடீரென ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பணக்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.