4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்: தட்டித் தூக்கிய போலீஸ்

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்: தட்டித் தூக்கிய போலீஸ்

திருவண்ணாமலையில் சாக்லேட் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே சேத்பட் பகுதியில் ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சேத்பட் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மனைவி பிரபாவதி நடத்தி வருகிறார். உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் காமராஜ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மனைவி நடத்தும் பள்ளிக்கு காமராஜ் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். கடந்த வாரம் திடீரென அந்த சிறுமிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர், சிறுமியை வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது சிகிச்சையில் தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. பள்ளி தலைமையாசிரியை பிரபாவதியின் கணவர் காமராஜ், 4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போளுர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார். இதையறிந்த அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் தலைமறைவானார். திருச்செந்தூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார். இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் சேத்பட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in