
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 4-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவையில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூரில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் கானப்படும். சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.