கருணாநிதியின் கோரிக்கை 13 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறுகிறது: தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடி!

கருணாநிதியின் கோரிக்கை 13 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறுகிறது:  தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடி!

தமிழகக் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்ட, ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் பிரம்மாண்ட விழா வரும் 31-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியைத் தமிழக போலீஸாருக்கு வழங்க உள்ளார்.

இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி எனப் பெயர் பெற்ற தமிழக காவல் துறையில், முதல் கைரேகை பிரிவு, தடய அறிவியல் பிரிவுகள், வயர்லெஸ் அமைப்பு, கடலோர காவல் படை எனப் பல பிரிவுகள் முதன்முறையாகத் தொடங்கப்பட்டன.

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடியை வழங்கவேண்டும் எனக் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையைத் தமிழக காவல் துறையின் 150-வது ஆண்டு விழாவையொட்டி பிறப்பித்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. 13 வருடங்களுக்குப் பிறகு அணிவகுப்பு நடத்தி தற்போது ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்புக் கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உள்துறை செயலாளர் உள்ளிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் எனப் பொறிக்கப்பட்டு, தமிழகக் காவல்துறையின் சின்னத்தைப் பொருத்தி இந்த சிறப்புப் பட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் பொறித்த பட்டையைக் காவலர் முதல் டிஜிபி வரை அனைவரும் தங்கள் சீருடையின் வலது தோள்பட்டையில் அணிந்து கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in