தமிழக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து இருப்பதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் தன் சமூகவலைதளப் பக்கத்தில், “கோவை வடவள்ளியில் உள்ள பிரபலமான பெட்ரோல் பங்க் அது. நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்றைக்கு இரவு காருக்கு பெட்ரோல் போட அங்கே சென்றபோது அந்த மாற்றத்தை கவனித்தேன். பெட்ரோல் பங்கில் வழக்கமாக வேலை பார்க்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் யாருமே அங்கு இல்லை. அதற்கு பதிலாக, வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் பெட்ரோல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
பெட்ரோல் பங்க் அதிபர் எனக்கு நண்பர் என்பதால் அவரிடம் சென்று 'இதற்கு முன்பு வேலை செய்த பணியாளர்கள் எங்கே ?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'இங்கே வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் எல்லோருமே மது பழக்கத்திற்கு அடிமையாகி, ஒவ்வொருவராக உடல் நலம் பாதித்து,பணி செய்ய முடியாமல் வேலையில் இருந்து நின்று விட்டார்கள்' என்று அவர் சொன்ன போது அதிர்ந்து போனேன்.
முன்பெல்லாம் என்னுடைய கார் பங்க்கின் உள்ளே நுழைந்ததுமே அங்கே பணி புரியும் தமிழ் இளைஞர்கள் 'ராஜேஷ்குமார் சார் வந்துட்டாரு' என்று சொல்லி ஆர்வமாக ஓடிவந்து என்னிடம் பேசுவார்கள். 'ஸாருக்கு பெட்ரோல் சீக்கிரமா போட்டுவிடு' என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் டயருக்கு ஏர் செக் செய்ய தயாராக இருப்பார்.
இவ்வளவு துடிப்பான இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி, உடல் நலம் கெட்டு வேலையிலிருந்து நின்று விட்டார்கள் என்பதை அறிந்த போது மனசுக்குள் பரவிய அந்த வலி இன்னமும் ' விண்....விண் ' " என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் ராஜேஷ்குமார்.