வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலாச் சென்ற தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!

வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலாச் சென்ற தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!

தமிழக பள்ளிகல்வித்துறை நடத்திய வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவ, மாணவிகளை வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி.

பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்தனர். அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்தது.

ஏற்கெனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி, 68 மாணவ, மாணவிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சியில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டனர். மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வருகிற 13-ம் தேதி வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர். இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in