
தமிழ்நாட்டில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா்.
நாட்டுப்புறக் கலைகள் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜன.11-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் சாதி மற்றும் மலைவாழ் சமூகத்தின் பெயரில் எந்தவித நடன நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் திருவிழாக் காலங்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில், குறவன் - குறத்தி எனப் பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது. இதற்கு எந்தவித அனுமதியும் தரக்கூடாது எனவும் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து, கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் 'கரகாட்டம் உட்பட ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதையடுத்து சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து உத்தரவு வெளியிட்டுள்ளாா். 'தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.
மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் செயல்படுத்த வேண்டும்' என்று உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.