
நீதி கேட்கும் நெடும் பயணம் சென்றுள்ள தமிழக விவசாயிகள், பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தலைவரான தேஜஸ்வி யாதவை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் குமரி முதல் டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நீதிகேட்கும் நெடும் பயணம் நடத்தப்படுகிறது. அந்தப் பயணத்தின் வழியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான பயணக்குழு இன்று காலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தது.
பயணத்தின் நோக்கம் குறித்து அவரிடம் எடுத்துரைத்த பயணக் குழு, பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்தது.
விவசாயிகளின் இந்த பயணத்திற்கும் அவர்களது கோரிக்கைக்கும் ஆதரவளிப்பதாகவும், டெல்லியில் 21-ம் தேதி நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தங்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றக் தலைவர் பங்கேற்க ஏற்பாடு செய்ததாகவும் தேஜஸ்வி யாதவ் விவசாயிகளிடம் கூறினார்.
முன்னதாக அவரது மூத்த சகோதரரும் பீகார் மாநில வனத்துறை அமைச்சருமான தேஜ்பிரதாப் யாதவையும் விவசாயிகள் குழு சந்தித்து வாழ்த்து பெற்றது.