நீதிமன்றம் சென்ற தாசில்தார் நெஞ்சுவலியால் திடீர் மரணம்

தனி வட்டாட்சியர் சதாசிவம்
தனி வட்டாட்சியர் சதாசிவம் நீதிமன்றம் சென்ற தாசில்தார் நெஞ்சுவலியால் திடீர் மரணம்

தருமபுரி மாவட்டத்தில் தனி வட்டாட்சியராக பணிபுரிந்த  சதாசிவம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் சென்று விட்டு திரும்பும்போது நெஞ்சுவலியால் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அம்பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி மகன் சதாசிவம். இவர் தர்மபுரி மாவட்ட தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் அரசுப் பணியாக சென்னை நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்தார்.  பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை ஊர் திரும்புவதற்காக பேருந்தில் ஏறினார். அப்போது திடீரென சதாசிவத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில் மயங்கி சாய்ந்தவர் பேருந்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். 

இன்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தர்மபுரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தொடக்க காலத்தில் அறிவொளி இயக்கம், புத்தா சேவாமையத்தில் பணியாற்றி உள்ளார். 

வருவாய் துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், பதவிகளை வகித்து பின்னர் பென்னாகரம் தாசில்தாராக பணியாற்றி உள்ள சதாசிவம், அதன்பிறகு எட்டு வழிச்சாலை நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றியவர் தற்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தாராக பணிபுரிந்தார். 

இன்னும் இரண்டு மாதத்தில் ஓய்வு பெறவுள்ள நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in