மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்: நடத்தையில் சந்தேகத்தால் நடந்த கொடுமை

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

சிதம்பரம் அருகே தனது மனைவியின்  நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்,  மனைவியின் கழுத்தை கத்தியால்  அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே கோப்பாடி ரோட்டு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இவரது மனைவி இன்பவள்ளி (38). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தமிழ்ச்செல்வன் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.  அண்மையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச் செல்வன்,  தனது மனைவி இன்பவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த  தமிழ்ச்செல்வன் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். ஒருகட்டத்தில்  மனைவி மீதான ஆத்திரம் புத்தியை மறைக்க தமிழ்ச்செல்வன்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அந்த இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த தகவலின் பேரில் குமராட்சி காவல் ஆய்வாளர்  அமுதா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீஸார்  அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in