விதிகளை மீறி குழந்தை பெற்ற நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் தம்பதி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் அலெக்சாண்டர். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் தம்பதி மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று புகார் அளித்துள்ளார்.
அதில், திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து பல கட்டங்களாக முயற்சி செய்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் தான் செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடியும். இந்த நிலையில் நட்சத்திர தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தம்பதியர் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம். இது ஏற்புடையதல்ல. இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் செயல். மேலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றிருப்பது விதிகளுக்கு உட்பட்டு நடந்துள்ளதா என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருந்து வருவதும் சட்டத்தை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாடகைத்தாய் நியமித்தலில் இருந்து எந்த மருத்துவமனையில் கருத்தரித்தல் நடந்தது போன்ற முழு விவரத்தை காவல்துறை கண்டறிந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியுள்ளார்.