
முனைவர் பட்ட ஆய்வு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுரண்டை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இதில் வணிகவியல் துறை மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் அஜித் என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.அதையடுத்து அந்த மாணவி, இதுகுறித்து கல்லூரி முதல்வர் உட்பட முதலமைச்சர் வரை மனுக்கள் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் அந்த பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பேராசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று கல்லூரியைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.