
பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த மாணவரை கண்டித்த அரசு பஸ் டிரைவர் மீது கொலை தாக்குதல் நடந்தது.
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் இருந்து அரசு டவுன் பஸ் நேற்று மாலை கிளம்பியது. வாலாந்தரவை ரயில்வே கேட் அருகே வந்தபோது பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை இருக்கையில் வந்து அமருமாறு டிரைவர், கண்டக்டர் என இருவரும் பலமுறை அறிவுறுத்தினர்.
இதை துளியும் கண்டுகொள்ளாத அந்த மாணவர் சிறிது நேரத்தில் கைபிடி நழுவி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை கண்டக்டரும், டிரைவரும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பினர். இதையடுத்து, பஸ்சை எடுக்க முயன்றபோது வாலாந்தரவையைச் சேர்ந்த சிலர், டிரைவர் பாலமுருகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் மயக்கமடைந்த டிரைவரை, கண்டக்டர் வேல்முருகன் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அரசு போக்குவரத்து பணியாளர்கள் திரண்டதால் இரவில் பரபரப்பு நிலவியது. இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.