
திருநெல்வேலியில் கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு மாணவி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சென்னையில் இருக்கும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் திருநெல்வேலி வந்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரின் மகள் கிதோரின் ஸ்மைலா. இவர் திருநெல்வேலி மாவட்டம், டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள செவிலியர் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கிதோரின் ஸ்மைலா கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார்.
இன்று காலையில் விடுதியில் உள்ள தன் அறையில் இருந்து காலைச் சாப்பாடு எடுக்க கிதோரின் ஸ்மைலா வெளியில் வரவில்லை. சம மாணவிகள் இதுகுறித்து விடுதிக் காப்பாளரிடம் தெரிவித்தனர். அவர் உட்புறமாகப் பூட்டப்பட்ட கதவை பார்த்ததும், முன்னீர்பள்ளம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கிதோரின் ஸ்மைலா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து கிதோரின் ஸ்மைலா குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சென்னையில் இருந்து கிளம்பி வந்து கொண்டுள்ளனர். செவிலியர் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் இதுவரைத் தெரியவில்லை. போலீஸார் சக மாணவிகளிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.