போலீஸ் விசாரணையால் மனஉளைச்சல்: தூக்கிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

போலீஸ் விசாரணையால் மனஉளைச்சல்: தூக்கிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

போலீஸ் விசாரணையால் மனஉளைச்சல் ஏற்பட்டு கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களது மகள் ஸ்ரீநிதி (19) சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை உமா விழித்த போது அருகில் இருந்த மற்றொரு அறையில் அவரது மகள் ஸ்ரீநிதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியைடந்தார். இதனால் அவர் கதறி அழுதார். அவரது அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவல் அறிந்த திருவேற்காடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ஸ்ரீநிதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீநிதியின் செல்போனை மீட்டனர். அத்துடன் ஸ்ரீநிதியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்," கருமாரியம்மன் நகருக்கு வருவதற்கு முன்பு சிவசங்கர் நகரில் குடியிருந்தோம். அப்போது வீட்டு உரிமையாளரான ரேவதியிடம் 2 பவுன் நகையைக் குடும்ப பிரச்சினை காரணமாக வாங்கி அடகு வைத்தோம். அதன் பின்னர் சில காரணங்களால் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்தில் குடிபெயர்ந்தோம்.

இந்த நிலையில் ரேவதியின் கணவர் வினோத், நாங்கள் அவரது மனைவியிடம் 7பவுன் நகையை வாங்கியதாக கூறி எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் எங்களை அழைத்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்வதற்கு முன்பு எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் எங்கள் மகள் போனில் பேசியுள்ளார். இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த எங்களது மகள் ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in