
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னத்தின் எதிரொலியாக நாகை,காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. வங்கக்கடலில் திரிகோண மலைக்கு வடகிழக்கில் 230 கிலோ மீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மூன்றாம் எச்சரிக்கைக் கூண்டு காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதை மீனவர்களுக்கு உணர்த்தும்வகையில் ஏற்றப்படுவதாகும்.
மீன்பிடிக்கச் செல்லவில்லை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 48 மீனவ கிராமங்களிலும் முழுக்க கிறிஸ்தவர்களே உள்ளதால் கடல் தொழிலுக்குச் செல்லவில்லை. நாளை சுனாமி நினைவுதினம் என்பதால் அதற்கும் நினைவுத் திருப்பலிகள் உள்ளது. அதன் காரணமாக குமரி மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.