கிடப்பில் கிடக்கும் மதுரை விமானநிலைய விரிவாக்கத் திட்டம்: சர்வதேச அந்தஸ்து எப்போது கிடைக்கும்?

கிடப்பில் கிடக்கும் மதுரை விமானநிலைய விரிவாக்கத் திட்டம்: சர்வதேச அந்தஸ்து எப்போது கிடைக்கும்?

சென்னைக்கு 2-வது விமானநிலையம் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை விமானநிலையம் விரிவாக்கப்பணி திட்டமும், சர்வதேச விமானநிலையம் அந்தஸ்து நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தென் மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென் தமிழகத்தில் மதுரை விமானநிலையம் உள்நாட்டு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விமானநிலையமாக செயல்படுகிறது. உள்நாட்டு பயணிகள் வருகையில் திருச்சியைவிட மதுரை விமானநிலையத்தில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் அதிகம். மதுரையைவிட மிக மிகக் குறைவாக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் திருப்பதி, மங்களூர், வாராணசி, ஷீரடி விமான நிலையங்கள்கூட சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரை விமானநிலையம் இதுவரை சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்படவில்லை. மதுரை விமானநிலையம் தற்போது வரை ‘கஸ்டம்ஸ்’ விமான நிலையமாக மட்டுமே செயல்படுவதால் வெளிநாடுகளில் இருந்து அந்த நாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக மதுரைக்கு விமானங்களை இயக்க முடியவில்லை.

திருப்பதி, ஷீரடி, வாராணசி போன்ற நகரங்களை போல் உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலை கொண்டுள்ள மதுரையும் இந்தியாவின் முக்கிய ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாகவும் திகழ்கிறது. அதன் அடிப்படையில் மதுரையில் விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசியல் காரணங்களுக்காக மதுரை விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல், மதுரை விமானநிலையம் விரிவாக்கத்திற்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி ஒதுக்கி கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை விமானநிலையம் ஓடுதள விரிவாக்கம், மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையின் மேல்புறம் ஓடுதளம், ஓடு தளத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் வகையில் அண்டர் பாஸ் பாலம், புதிய சரக்கு முனையம், பயணிகள் வசதிக்காக மேலும் 2 முனையங்கள் போன்ற பணிகள் கிடப்பில் உள்ளது.

ஆனால், சென்னையின் 2-வது விமானநிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் சுறுசுறுப்பாக நடக்கும் நிலையில் மதுரை விமானநிலையம் விரிவாக்கப்பணிகளும், சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது தென் மாவட்ட மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. தென் மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும என்று எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத் தலைவர் ஜேகதீசன் கூறுகையில், ‘‘தமிழக அரசிடம் விமானநிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த திட்டப்பணிகளை பற்றி விமானநிலையம் அதிகாரிகள் எப்போது தொடங்கும், முடிக்கப் போகிறோம் என்று சொல்வதில்லை. மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையின் மேல்புறம் ஓடுதளம், ஓடு தளத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் வகையில் அண்டர் பாஸ் பாலம் முடிந்தால் மட்டுமே விமானநிலையத்தில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய முடியும். தற்போது ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், துபாய்க்கு மட்டுமே மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா மட்டுமே பிஏஎஸ்ஏ எனப்படும் இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளையும் அந்த ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், இதுவரை இணைக்கப்படவில்லை’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in